தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கும்; 7 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்தாகலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கும், புதுச்சேரி சட்டப்பேரவைக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வந்த அனல் பறக்கும் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. எனினும், இரவு நேரங்களில் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்தன.
அதிலும் குறிப்பாக சென்னை, கோவை, சேலம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிகளவில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் ரூ.57.70 கோடியும், கோவையில் ரூ.55.48 கோடியும், சேலத்தில் ரூ.44.88 கோடியும், திருப்பூரில் 15.43 கோடியும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க, பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெற்று வருவதாகக் கூறி, தமிழகத்தில் கொளத்தூர், சேப்பாக்கம், காட்பாடி, திருச்சி மேற்கு, திருவண்ணாமலை ஆகிய 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. அத்துடன் சேர்த்து கரூர் உள்பட 7 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்ய இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக, சமூக வலைதளங்களில் இன்று பிற்பகலில் இருந்தே தகவல்கள் பரவின.
இது அரசியல் கட்சியினர் மத்தியில் கவலையையும், வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தின. ஆனால், தேர்தல் ஆணையம் இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறுகையில், தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிக்கும் நாளை தேர்தல் நடக்கும்; 7 தொகுதிகளுக்கு தேர்தல் ரத்தாகலாம் என்ற தகவல் உண்மைக்கு புறம்பானது என்றார்.