--- --:--:-- --

உப்பூர் அனல்மின் திட்டத்தால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு..! ராமநாதபுரம் சார் ஆட்சியரிடம் கடலோர கிராம மக்கள் மனு!!

ed2bc156-21da-4c21-b415-a3b1f23b679f

உப்பூர் அனல் மின் திட்டப் பணிகளால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து விளைவிக்கும் இத்திட்டப் பணிகளை உடனே நிறுத்த வலியுறுத்தி கடலோர கிராம மக்கள் ராமநாதநாதபுரம் சார் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அனல் மின் திட்டத்திற்கு சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார் மனு அனுப்பி உள்ளனர். அனல் மின் நிலையத்திற்கு கடலில் இருந்து 8 கி.மீ., க்கு பாலம் கட்டி, ராட்சத குழாய்கள் மூலம் கடல் நீரை உறிஞ்சி அதன் பிறகு கடல் நீரை சூடாக்கி அதனை மீண்டும் கடலில் விடும்போதும் தெரிகிறது. இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

 

மேலும் மோர்ப் பண்ணை மற்றும் திருப்பாலைக்குடி இடையே பாரம்பரிய மீன்பிடி முறையான நாட்டுப்படகு மீன் பிடி தொழில், மீன்கள் இனப்பெருக்கம், சதுப்பு நிலக்காடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்பசு, கடற்குதிரை உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

டால்பின் துள்ளி குதித்து விளையாடும்போது பாலத்தின் மீது மோதி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. கடலில் பாலம் கட்டுமான கழிவு பொருட்களை எல் அண்ட் டி நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அனுமதியை மீறி கடலில் கொட்டி சுற்றுச்சூழலை மாசுபடுத்தி வருகிறது. இது தொடர்பாக சட்ட போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொய் வழக்கு தொடரப்படுகிறது.

 

ராமநாதபுரம் உள்பட 13 கடலோர மாவட்டங்களில் மண் அள்ளக்கூடாதென சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவும் அவமதிப்பு செய்யப்படுகிறது. இதனால், சட்டத்தை மீறும் உப்பூர் அனல் மின் திட்டப்பணியை நிறுத்த வேண்டும் என மருதம், நெய்தல் கிழக்கு கடற்கரை கிராம கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் எஸ்.ஏ.முகமது உமர் பாரூக், ராமநாதபும் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ராவிடம் மனு அளித்தனர்.

 

இது குறித்து மோர் பண்ணை கிராமத் தலைவர் துரை பாலன் கூறுகையில், உப்பூர் அனல் மின் திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி பிப்.10-ந் தேதி சாலை மறியல் நடத்த திட்டமிட்டிருந்தோம். போலீசார் கேட்டுக்கொண்டதற்கிணங்க மறியல் போராட்டத்தை விலக்கி கொண்டு, சார் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரை, கலந்தாலோசித்து திட்டப் பணியை நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார் என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon