தமிழகத்தில் தீவிரம் அடையும் என்ஐஏ சோதனை! தொடரும் விசாரணை
அல்கொய்தா மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தமிழகத்தில் 4 இடங்களில் சோதனை நடத்திய என்ஐஏ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் என்ற கேரள அமைப்பின் அலுவலகம் சென்னை மண்ணடியில் உள்ள லிங்கிசெட்டி தெருவில் செயல்பட்டு வருகிறது. காலை 6 மணியளவில் அங்கு சென்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொண்ட குழு சோதனையை தொடங்கியது.
ரெட்டேரியில் உள்ள வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவர் சையத் முகமது புகாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. தடை செய்யபட்ட இயக்கங்களுக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த இயக்கத்திற்கு வெளிநாட்டு பணப்பரிமாற்றம் நடந்ததா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல வஹாத் இஸ்லாம் என்ற அமைப்பு தொடர்பாக நாகையில் இருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது . ஹசின் அலி, ஆரிப் முகமது ஆகியோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் லேப் டாப், பெண்ட்ரைவ், செல் போன்கள் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. ஹசின் அலியை நாகை எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து சென்று இருக்கும் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல வஹ்தத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் தலைவர் சையத் முகமது புகாரியை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




