--- --:--:-- --

9 அமைச்சர் பதவி கேட்டு பாஜகவை அணுகியதா திமுக? தமிழிசையின் பேட்டிக்கு பின்னால் இருக்கும் டெல்லி சந்திப்பு!

Stalin tamilisai

தேர்தலுக்கு பின் தேவைப்பட்டால், பாஜகவுக்கு ஆதரவு தர திமுக தயாராக உள்ளது; ஆனால், 5 கேபினட் அமைச்சர் பதவி உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவி தேவை என்று நிபந்தனையுடன், பாஜக தலைவரை திமுகவினர் கடந்த வாரம் சந்தித்ததாக, தகவல் கசிந்துள்ளது; இதை மனதில் வைத்து தான், திமுக எங்களை அணுகியது என்று தமிழிசை கூறியதும் தற்போது தெரிய வந்துள்ளது.

 

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் என்றால், டெல்லியில் அடுத்து ஆட்சியை பிடிப்பார்கள் என்று தான் கேள்வி எழும்; இம்முறை, 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளதால், தமிழக அரசின் தலைவிதியும் இதில் அடங்கி இருக்கிறது.

 

 

இதற்கிடையே, ரகசியமாக கசிந்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவு ஒன்றில், பாஜக அணிக்கு 300க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதை கேட்டு, தமிழக அரசை கலைத்து, ஆட்சியில் அமர வேண்டும் என்று காய்களை நகர்த்தி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சி அடைந்தாராம்.

 

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வேண்டும் எனில், அதற்கு மத்தியில் ஆட்சிக்கு வரும் புதிய அரசின் ஆதரவு தேவை என்று உணர்ந்துள்ள ஸ்டாலின், ஒருவேளை பா.ஜ.க. வெற்றி பெற்றால் அக்கட்சியையும் அனுசரித்து செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று, அக்கட்சி மூத்த நிர்வாகிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

 

அதன் ஒருபகுதியாக தான், கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் ஒருவரை, திமுக வை சேர்ந்த ஸ்டாலின் உறவினர் மற்றும் கனிமொழியின் நெருங்கிய தோழி ஒருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில், தேர்தலுக்கு பிந்தைய சூழலை பொருத்து, பாஜகவுடன் சேர திமுக தயங்காது என்று கோடிட்டு காட்டப்பட்டதாகவும் தெரிகிறது.

 

 

தமிழகத்தில் உள்ள 38 இடங்களில் 30 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுகவே வெற்றி பெறும்; எனவே, பாஜக மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவு தேவைப்படும் சூழலில் சில நிபந்தனைகளுடன், ஆதரவை வழங்க திமுக தயாராக இருப்பதாகவும்; இதற்கு பிரதிபலனாக திமுகவிற்கு 9 அமைச்சர்கள் பதவி, அதில் 5 கேபினட் அந்தஸ்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதாம். அத்துடன், தமிழக அரசை அகற்றுவதற்கு உதவ வேண்டும் என்றும் திமுக தரப்பில் கூறப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ஆனால், இந்த நிபந்தனைகளை எல்லாம் எதிர்பார்த்த அந்த பாஜக தலைவர், தேர்தல் முடிவு வரட்டும்; அகில இந்திய தலைமையுடன் ஆலோசித்தே முடிவு தெரிவிக்கப்படும் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு நழுவிவிட்டாராம்.

 

திமுக தரப்பு விதித்த நிபந்தனைகளை பார்த்து, பாஜக தலைமை கோபமடைந்ததாகவும், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே, இவ்வளவு கோரிக்கைகளா? அதையெல்லாம் ஏற்க பாஜக தயாராக இல்லை என்று திட்டவட்டமாக, பாஜக தரப்பு கூறிவிட்டதாம். இதனால் ஏமாற்றத்துடன் திமுக தரப்பு திரும்பியதாக, பெயர் வெளியிட விரும்பாத பாஜக நிர்வாகிகள் கூறினர்.

 

 

இதையெல்லாம் வைத்து தான், பாஜகவுடன் திமுக தொடர்பில் இருக்கிறது என்று தமிழிசை சில தினங்களுக்கு முன்பு கூறியுள்ளார். ஆனால், பாஜக தரப்பு சிவப்பு சிக்னல் காட்டிய கோபத்தில், தமிழிசைக்கு ஸ்டாலினே உடனடியாக, சற்று ஆவேசமாக பதிலடி தந்ததாக, அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது.

 

எது எப்படியானாலும், தேர்தலுக்கு பிறகு எழும் அரசியல் சூழலை பொருத்து, அரசியலில் நிரந்த எதிரியோ, நண்பரோ கிடையாது என்று வழக்கம் போல் சொல்லிவிட்டு, பாஜக பக்கம் திமுக சாய்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon