மதுரை மண்டலத்துக்குட்பட்ட்ட பேருந்துகளில் மார்ச் மாதத்துக்கான பஸ் பாஸ் ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்!
மதுரை மண்டலத்துக்குட்பட்ட்ட பேருந்துகளில் மார்ச் மாதத்துக்கான பஸ் பாஸ் ஜூன் 15 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என மதுரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது தமிழக அரசு இதனால் பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முதல் பேருந்துகள் இயங்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் மார்ச் மாதம் வாங்கிய பஸ் பாஸ் வீணாகியுள்ளது என்று மக்கள் கவலையில் இருந்த நிலையில், மார்ச் மாதம் வாங்கிய பஸ் பாஸ் ஜூன் 15ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என்று மதுரை மாநகரப்போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநகரப்போக்குவரத்துக் கழகங்கள், விருப்பம்போல் பயணம் செய்யும் சலுகைப் பயணச் சீட்டுகளை வழங்குவது வழக்கம். அந்த வகையில் மாதம் முழுக்க மாநகரப்பேருந்துகளில் பயணம் செய்வதற்கு ரூ.1000 மதிப்புள்ள பாஸ் வழங்கப்படும். இந்த பாஸ் குறிப்பிட்ட மாதத்தின் 16ஆம்தேதி முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை செல்லுபடியாகும். அந்தவகையில் மார்ச் மாதம் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரையிலான 1000 ரூபாய் பஸ் பாஸ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், ஊரடங்கு காரணமாக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் அந்த பாஸ் பயன்படுத்த முடியாமல் ஆனது இந்நிலையில் இந்த ஜூன் மாதத்துக்கு புதிய பாஸ் வாங்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான், மார்ச் மாத பாஸையே ஜூன் 15ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மதுரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இதனால் 16,882 பயணிகள் பயனடைவார்கள் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.






