தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தவர்களை ஓடவிட்ட தேனீக்கள்..!
தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினரை தேனீக்கள் விரட்டி விரட்டி தாக்கின. தெலுங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
குறிப்பாக காங்கிரஸ், பாஜக கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக புவனகிரி மாவட்டத்தில் பிஆர்எஸ் கட்சி சட்டமன்ற வேட்பாளர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது அந்த கட்சியின் தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
அப்பொழுது மரத்தில் இருந்த தேனீக்கள் கூறி பட்டாசு வெடித்ததால் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தேனீக்கள் தாக்குதல் நடத்தின. இதனால் கட்சி நிர்வாகிகள் கட்சி கொடியையும் பெண்கள் புடவையையும் கொண்டு முகத்தை மூடிக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பிரச்சாரம் தொடர்ந்தது. தேனீக்கள் தாக்கியதில் இருவருக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.





