இன்று 4 மாவட்டங்களில் கனமழை கொட்டும்..!
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. சென்னை மாநகரப் பகுதிகளான தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், தியாகராய நகர் உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை வெளுத்து வாங்கியது.
சென்னை புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், கோவூர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை கொட்டியது. இதேபோல, ஆலந்தூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், குரோம்பேட்டை பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் மிதமான மழை நீடிக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் வரை குறையக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






