6 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..!
தொடர் கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் வரும் 23 ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 23 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கு அடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 11 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, கோவில்பட்டி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் போன்ற தென்மாவட்ட பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
இடைவிடாது பெய்யும் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கனமழை எச்சரிக்கையாக தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இந்த மாவட்டங்களில் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்படியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காரைக்காலில் தொடர்ந்து 3வது நாளாக மழை பெய்துவரும் நிலையில் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே, கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை உட்பட மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, திருவட்டார் கல்வி மாவட்ட சரகத்தில் இயங்கும் பேச்சிப்பாறை பகுதி பள்ளிகளுக்கு படகில் மாணவர்கள் செல்வதால், அப்பகுதி பள்ளிக்கு மட்டும் விடுமுறை வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகார பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.
இதேபோல், நாகையில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து விடுமுறை குறித்து அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவெடுத்துக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி அறிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரின் அறிவுரையை தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் அறிவித்துள்ளார். இதையடுத்து மழை காலங்களில் மாணவர்களின் வருகையை கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






