மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000: நீக்கப்படும் பயனாளர்கள் யார் யார்?
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கொண்டு வந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திட்டம். ஏழை, எளிய மக்கள் மாதந்தோறும் தங்களின் வங்கிக்கணக்கில் 1,000 ரூபாயை பெறும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டமானது, நிதி நெருக்கடி காரணமாக இரண்டு ஆண்டுகள் கால தாமத்திற்கு பின்பு கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் சரியான நபர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வருமான வரி செலுத்தக் கூடாது. சொந்தமாக கார் வைத்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவு மின் கட்டணம் மட்டுமே செலுத்தியிருக்க வேண்டும் என கறாராக பயனாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கிடையில் தகுதியுள்ள பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று சர்ச்சை வெடித்தது. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தகுதியுள்ள பயனாளர்கள் சரியாக அடையாளம் காணப்படவில்லை என்ற சலசலப்பு நீடித்து வருகிறது. இந்நிலையில் தான் மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்டுள்ளது. அதாவது, மகளிர் உரிமைத்தொகை பயனாளர்களின் விவரங்கள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித் தரவுகள் ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்பட்டு வரி செலுத்தும் வரம்பிற்குள் வருகிறார்களா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படும். குறிப்பாக வருமான உயர்வு, நான்கு சக்கர, கனரக வாகனங்கள் பதிவு, பத்திரப்பதிவு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும் காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பயனாளிகளின் இறப்பு விவரங்கள் ஆய்வு செய்யப்படும். காலாண்டு அடிப்படையில் பொது விநியோக திட்ட, சரக்கு சேவை வரி, நில உடைமை தரவுகள் ஆய்விற்கு உட்படுத்தப்படும்.ராய்ந்து முடிவெடுக்கும் இடத்தில் ஊரகப் பகுதிகளில் ஆர்.டி.ஓ அதிகாரியும், நகர்ப்புற பகுதிகளில் ஊரக ஆணையாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இத்தகைய செயல்பாடுகளை கவனிக்கும் வகையில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் தலைமையில் திட்ட செயலாக்கக் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் வளர்ச்சி ஆணையர், நிதித்துறை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.






