புதுச்சேரியில் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட கருவாடிக்குப்பத்தை சேர்ந்தவர் உமா சங்கர். இவர் பாஜக மாநில இளைஞரணி துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இவர் மீது தமிழ்நாடு, புதுச்சேரியில் பல்வேறு காவல்நிலையங்களில் வழிப்பறி, பாலியல் தொழில், கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இவருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்றிரவு லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் பிறந்தநாளையொட்டி காமராஜ் நகர் தொகுதியில் பிரமாண்ட விழாவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு உமார் சங்கர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 10க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் உமா சங்கரை வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பியது.இதில், முகம், கை, உடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்த உமா சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.