திருவனந்தபுரம் அருகே 17 வயது மாணவனை கடந்த 2 வருடங்களாக பலாத்காரம் செய்து வந்த 45 வயது பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் திருவனந்தபும் அருகே பொழியூரை சேர்ந்த 17 வயது சிறுவன் அப்பகுதி பள்ளியில் பிளஸ்ஒன் படித்து வருகிறார். இந்த மாணவன் வீட்டில் தகராறு செய்வது, டி.வி.யை உடைப்பது, சாப்பிடாமல் இருப்பது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்.
இதனால் மனவேதனையடைந்த பெற்றோர் குழந்தைகள் நல அதிகாரியிடம் சிறுவனை கவுன்சிலிங் அழைத்து சென்றனர். அவர்கள் மாணவனிடம் விசாரித்தனர். இப்போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோடை விடுமுறையை கொண்டாட மாணவன் அருகில் உள்ள சித்தி வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, சித்தி வீட்டின் அருகே வசிக்கும் 45 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் வீட்டுக்கும் சிறுவன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அந்த பெண் மாணவனை வீட்டுக்கு அழைத்து ஆசைக்கு இணங்க வைத்துள்ளார்.
அதன் பிறகு தினமும் வீட்டுக்கு வரவழைத்து மாணவனை பலாத்காரம் செய்துள்ளார். கோடை விடுமுறை முடிந்த பிறகு வழக்கம்போல் மாணவன் வீட்டுக்கு சென்றார். இருப்பினும் மாணவன் அவ்வப்போது பள்ளிக்கு செல்லாமல் அந்த பெண் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சித்தி வீட்டில் தங்கி படிக்க போவதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால், இதனை பெற்றோர் ஏற்காததால் வீட்டில் ரகளையில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாணவன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.