‘ஏசி’ மின்கசிவால் 3 பேர் இறந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்! திட்டமிட்ட கொலையா என சந்தேகம்!!

திண்டிவனத்தில், ஏசி மின்கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், தந்தை, தாய், மகன் உயிரிழந்ததாக கருதப்பட்ட நிலையில், திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராய பிள்ளை தெருவைச் சேர்ந்த ராஜ்; அவர் மனைவி கலைச்செல்வி. இவர்களின் இளைய மகன் கவுதம். மூவரும், வீட்டின் ஒரு அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர். நேற்று காலை, படுக்கை அறையில் தீப்பிடித்து எரிந்து மூன்று பேரும் உடல் கருகிய நிலையில் உயிரிழந்தது தெரிய வந்தது.

 

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், மூவரின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் ஏசி மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில், இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.

 

ஆனால், இறந்த ராஜின் உடலில் இருந்து வழிந்த ரத்தம், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தீவிபத்தில் இறந்தவர் உடலில் இருந்து ரத்தம் வழிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்தது. எரிந்த நிலையில் அறையை விட்டு ராஜ் ஓடி வந்திருப்பதாக கூறப்படுவதால், அவரைத் தப்பிக்க விடக் கூடாது என்று, எவரேனும் தாக்கி இருக்கலாம் என்ற சந்தேகமும் உருவானது.

 

அத்துடன், அறைக்கு அருகில் கிடந்த காலி மண்ணெண்ணெய் கேன், இதை உறுதி செய்வது போல் இருந்தது. மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தி விட்டு, ஏசி மின்கசிவு எனக் கூறி திசை திருப்பியிருக்கலாம் என்று கோணத்திலும், போலீசார் விசாரிக்கின்றனர். மேலும், இறந்த ராஜூக்கு நிறைய சொத்துகள் இருப்பதால், அதை அபகரிக்கும் நோக்கில் ராஜூ, அவரது மனைவி மற்றும் இளைய மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.

 

தீ விபத்து ஏற்பட்ட போது, ராஜிவின் மூத்த மகன் கோவர்த்தனன், அருகே மற்றொரு அறையில் தனது மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்ததார். இதுதொடர்பாக அவரையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், ராஜ், கலைச்செல்வி, கவுதம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கழுத்தில் வெட்டுக் காயம் உள்ளதாகவும், உறவினர் ஜெய்சங்கர் என்பவர் கூறியுள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


Leave a Reply