மீன்பிடி தடை காலத்தில், இரவில் சிலர் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மீன்பிடி தடைக்காலம் என்பது, கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்துக்காக சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு, ஆழ்கடலில் மீன்பிடிக்க அரசு விதித்துள்ள தடைக்காலத்தை குறிப்பதாகும். பொதுவாக, கோடை காலங்களில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகம் நடைபெறும்.
இக்காலத்தில், மீன்கள் கடலுக்கு அடியில் உள்ள பாறைகளில் முட்டையிட்டு குஞ்சுகள் பொரிக்கும். விசைப்படகுகள் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் போது படகுகள் மற்றும் வலைகளில் அடிப்பட்டு மீன் குஞ்சுகள் அழியும் ஆபத்து உள்ளது. எனவே இக்காலங்களில் கடலில் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக படகுகளை இயக்கி மீன் பிடித்தல், தாராளமாக நடைபெற்று வருகிறது. இது, மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, அவற்றின் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்படக்கூடும். இதை, மீன் வளத்துறையும் கண்டு கொள்வதில்லை.

எனவே, இனியாவது உரிய நடவடிக்கை எடுத்து, மீன்பிடி தடைகாலத்தில் மீன்பிடிக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.