கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்திய மற்றும் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று கோவை, அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து மழை காரணமாக மே 8ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.







