குழந்தைகளின் ஆபாச படம் பார்த்தால் எத்தனை ஆண்டுகள் சிறை?
2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தப்பட்ட போக்சோ சட்டத்தின்படி குழந்தைகளின் ஆபாசப்படங்களை வெளியிடுவோர்கள், பரப்புபவர்கள், பார்ப்பவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அதன்படி முதன்முறையாக குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து பார்ப்பவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படத்தை பார்ப்பவர்கள் மட்டும் பதிவிறக்கம் செய்வதற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் ஆபாச படத்தை வலைதளங்கள் மூலமாக பார்க்கும் நபர்களுக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும். குழந்தைகள் ஆபாச படத்தை பதிவேற்றம் செய்பவர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
புகைப்படம், வீடியோ, டிஜிட்டல் படம் அல்லது கணினியில் உருவாக்கிய படம் என எந்த வடிவில் குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படுகிறது. அந்தப் படம் குழந்தைகளை வைத்து நேரடியாக உருவாக்கப்பட்டு இருந்தாலோ அல்லது குழந்தைகளின் படத்தை எடிட் செய்து இருந்தாலோ அது சட்டவிரோதம் என்று கூறப்படுகிறது.





