முரசொலியில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!
தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுவதற்கு மத்திய அரசின் கல்விக் கொள்கையே காரணம் என்றும் அதற்கு திமுகவினர் காரணம் அல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இதுதொடர்பாக முரசொலியில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், தெலங்கானா மாநில ஆளுநராக இருந்த தமிழிசை, தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதிலிருந்தே மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனை புரிந்து கொண்டு அயன்படுத்த முடியும் என்ற உணர்வையும் தனக்கான பிறந்த நாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி தமிழிசைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் இந்தி இடம்பெறவில்லை என்றும் அது தான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.தென்னிந்திய மாநிலங்களில் இந்தி கற்றுக் கொள்ள 6,000 மையங்களுடன் இந்தி பிரசார சபா உள்ளது; அதேபோல் வட இந்தியாவில் தென்னக மொழி ஒன்றை கற்றுத்தர சபா உள்ளதா? தமிழ் பிரசார சபாவையும், திராவிட பிரசார சபாவையும் வட இந்தியாவில் நிறுவ முடிந்ததா? என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும், திமுக-வினரில் மாநில அரசின் பாடத்தின் கீழ் தனியார் பள்ளிகளை நடத்துபவர்களும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பள்ளிகளை நடத்துபவர்களும் உரிய அனுமதியுடன் தான் நடத்துவதாகக் கூறியுள்ள முதலமைச்சர், தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுவதற்கு மத்திய அரசின் கல்விக் கொள்கையே காரணம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகள் எதிலும் இந்தி மொழி என்பது கட்டாயமில்லை என்றும் அந்த மொழியில் தேவு நடத்துவதில்லை என்றும் முதலமைச்சர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.






