நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனு அளித்து இருப்பதால் 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை வரும் 22ஆம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்ற டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
தூக்கு தண்டனையை ரத்து செய்யும்படி குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் கருணை மனு அளித்துள்ளார். இந்த நிலையில் தண்டனைக்கு எதிராக முகேஷ் தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது முகேஷ் சிங்கின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் இருப்பதால் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி 22ஆம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற இயலாது என டெல்லி அரசு தெரிவித்தது. மரணதண்டனை குற்றவாளியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த பின்னர் குற்றவாளிகளுக்கு அது தொடர்பாக 14 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருப்பதை நீதிமன்றத்தில் அவர் சுட்டிக்காட்டினார்.
வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கீழமைநீதிமன்றம் பிறப்பித்த தண்டனை நிறைவேற்றும் உத்தரவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். மேலும் குற்றவாளிகளுக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையில் தவறில்லை என்று கருதியதால் தான் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளின் மேல்முறையீட்டு மனு, மறுஆய்வு மனு மற்றும் மறு சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது என கருத்து தெரிவித்தனர்.
வேண்டுமெனில் இது தொடர்பாக மீண்டும் விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என நீதிபதிகள் கூறினர். இதனிடையே முகேஷின் கருணை மனுவை நிராகரிக்கும் படி பரிந்துரை செய்து இருப்பதாக டெல்லி துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.






