போலீசாரை ஆபாசமாக பேசி விரட்டியடித்த குற்றம் சாட்டபட்டவரின் உறவினர்கள்

வேலூர் மாவட்டம் அரக்காணம் அருகே வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்காக அழைத்து செல்ல வந்த போலீசாரை அவரது உறவினர்கள் தடுத்து விரட்டிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. அம்மனூரை சேர்ந்த சங்கர் லால் தன்னை தாக்கியதாக அதே பகுதியை சேர்ந்த முல்லை என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். சங்கர் லாலை காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் பலமுறை அழைத்தும் அவர் வர மறுத்ததால் கடந்த மாதம் 29 ஆம் தேதி அவரை கைது செய்ய சென்றுள்ளனர்.

 

உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சென்ற நிலையில் சங்கர் லாலின் உறவினர்கள் அவரை அழைத்து செல்ல விடாமல் தடுத்து ஆபாசமாக பேசி விரட்டி அடித்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் சங்கர் லாலை கைது செய்யாமல் போலீசார் திரும்பினார். அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்து அவர்களை தாக்க முற்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி‌எஸ்‌பி விஜயகுமார் கூறியுள்ளார்.