வாட்ஸப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவல்! தப்பிப்பது எப்படி?

வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற பெயரில் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்படும் மோசடி ஊரடங்கு காலத்தில் அதிகம் அரங்கேற தொடங்கி இருப்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு வாட்ஸ்அப் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. வாட்ஸ்அப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய சில ஆப்ஷன்களையும் அந்நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. மொபைல் பயனாளர்களின் அத்தியாவசிய அப்ளிகேஷனாக வாட்ஸ்அப் மாறி இருக்கும் சூழலில் வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேம் என்ற மோசடி எவ்வாறு அரங்கேறுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

வாட்ஸ்அப் கணக்கை தொடங்குவதற்கு ஒன் டைம் பாஸ்வேர்டு எனப்படும் ஓ‌டி‌பி எண் கட்டாயத் தேவையாக இருக்கும் சூழலில், யாரோ ஒரு மர்ம நபர் ஒரு குறுஞ்செய்தியை உங்களுக்கு அனுப்புவார். அதில் ஒரு OTP தவறுதலாக உங்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த OTP தன்னுடைய கணக்கிற்குள் நுழைவதற்கான எண் என சொல்லி அவர் உங்களிடம் அந்த ஆறு இலக்க OTP எண்ணை பார்வேர்ட் செய்ய சொல்வார்.

 

அவரை நம்பி நீங்கள் அதை ஃபார்வர்ட் செய்துவிட்டால் அந்த நொடியே உங்களுடைய வாட்ஸப் கணக்கின் ஒட்டுமொத்த கண்ட்ரோலும் அவரால் ஹேக் செய்யப்படும். அதன் பின்னர் உங்களுடைய வாட்ஸ் அப்பிற்கு வரும் அனைத்து எஸ்எம்எஸ் மற்றும் புகைப்படங்களை நீங்கள் பார்ப்பது போல் நேரடியாக அவரும் பார்க்க முடியும். அதேபோல் உங்களது வாட்ஸ்அப் கணக்கு மூலம் தவறான செய்திகளையும் அவரால் பகிர முடியும். எனவே எந்த ஒய்ப் எண்களையும் யாரிடமும் பகிராதீர்கள்.

வாட்ஸ்அப் வெரிஃபிகேஷன் ஸ்கேமில் நீங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் உங்களுடைய வாட்ஸப் கணக்கின் பாதுகாப்பை உறுதி செய்யவும் 2-step வெரிஃபிகேஷன் அப்ளிகேஷனை எனேபிள் செய்து கொள்ள வாட்ஸ்அப் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அதாவது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை ஓபன் செய்ததும் மேலே உள்ள மூன்று புள்ளிகளை அடையாளமாகக் கொண்ட மெனுவை கிளிக் செய்யுங்கள். அதில் வரும் செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

 

அதில் அக்கவுண்டை தொடர்ந்து டூ ஸ்டெப் வெரிஃபிகேஷன் ஐ கிளிக் செய்து எனேபிள் ஆப்ஸனை தேர்வு செய்து கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு பின் எண்ணை அமைக்க வேண்டும். இதை ஆய்வு செய்த பிறகு நீங்கள் அல்லது வேறு யார் வேண்டுமானாலும் வாட்ஸ்அப் கணக்கில் உள்நுழைய வேண்டும் என்றால் இந்தப் எண்ணை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

 

இதனால் உங்களுடைய வாட்ஸ்அப் கணக்கை ஓரளவேனும் பாதுகாக்கலாம். என்னதான் பாதுகாப்பை பலப்படுத்தினாளும் திருட நினைப்பவர்கள் ஏதோ ஒரு வழியை கண்டுபிடித்து கொண்டேதான் இருக்கிறார்கள். அதற்காக தொழில்நுட்பத்தை புறக்கணித்துவிட முடியாது. ஆனால் ஏமாற்றும் கும்பலிடம் இருந்து நம்மைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றால் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.