உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் ஏழாயிரம் கோடி முதலீடு செய்வதற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 7 ஆயிரம் 375 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த திங்கட்கிழமை 18வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், உலகளாவிய திறன் மையங்கள், தோல் அல்லாத காலணி, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, 7 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 19 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீடுகள் மூலம், வேலூர், திருச்சி, தூத்துக்குடி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.முன்னதாக, சென்னை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் ஆட்சேபனையற்ற அரசு புறம்போக்கு இடங்களில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.






