இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் நிர்வாகி தாக்கப்பட்டதை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த சில தினங்களுக்கு முன்பு நாகை மாவட்டம் சிக்கல் கிராமத்தை சேர்ந்த யூனூஸ் என்பவர் இணையதளத்தில், மாட்டுக்கறி தொடர்பான சர்ச்சை கருத்தினை பதிவிட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து இந்து மக்கள் கட்சியினர் அளித்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், நாகை மாவட்டத்தின் இந்து மக்கள் கட்சி செயலாளர் பார்த்திபன் சில மர்ம நபர்களால் தாக்கப்பட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்து மக்கள் கட்சி பிரமுகர் மீதான தாக்குதலை கண்டித்து கோவையில் இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் சங்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட பொதுச்செயலாளர் சந்தோஷ் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ஜோதிடர் அணி தலைவர் பிரசன்ன ஸ்வாமிகள் கலந்து கொண்டு பேசுகையில் தமிழகத்தில் இந்து அமைப்பினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும், தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இந்து மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.