தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

தமிழகத்தில் மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டு இருப்பதால் மின் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வீடுகள் சிறு குறு நிறுவனங்களிடமிருந்து மின் கட்டணம் வசூலிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

மேலும் மின் கட்டணம் செலுத்த இரண்டு மாதம் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியுமா என்றும் சென்னை உயர்நீதிமன்றம், அரசுக்கும் தமிழக மின் பகிர்மானக் கழகத்திற்கும் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து மே 18ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது அடுத்து புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் கூட்டம் கூட்டமாக மக்கள் குவிந்தனர். மின் கட்டணங்களை செலுத்துவதற்கான அவகாசம் மே மூன்றாம் தேதி வரையில் வழங்கப்பட்டு இருந்தது.

 

அந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது அடுத்து மின்னிணைப்பு அதிகாரிகள் துண்டித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அதிகளவிலான மக்கள் புதுக்கோட்டை மின்சார வாரிய அலுவலகத்தில் குவிந்தனர்.

 

முநூற்றுக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடிய நிலையில் அங்கு கணினி வேலை செய்யவில்லை என்று ஊழியர்கள் கூறியதால் மின் கட்டணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களுக்கும் மின்சார வாரிய ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.