மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணியினை இன்று கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான ராசாமணி பார்வையிட்டு அனுப்பி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் வாக்குப்பதிவன்று வாக்காளர்கள் எளிதில் சென்று வாக்களிக்கும் விதமாக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதற்கான பணிகளை வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், சிறப்பு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்பேரில் கோவை மாவட்டத்தில் 12,686 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர் வாக்குச்சாவடி மையங்களில் சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்தளப்பாதை, குடிநீர்,மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் மாவட்டத்தில் உள்ள 975 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள 3070 வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 975 வாக்குச்சாவடி மையங்களுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை இன்று கோவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,மாவட்ட ஆட்சியருமான ராசாமணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக உதவி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் வாய் பேசாத,காது கேளாத மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கும் சைகை மொழியில் விளக்கமளிக்கவும் வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.