மத்திய பிரதேச மாநிலத்தில் மாநகராட்சி அதிகாரியை தாக்கிய பாஜக எம்‌எல்‌ஏ

மத்திய பிரதேச மாநிலத்தின் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்‌எல்‌ஏ ஆகாஷ் விஜய் பர்கியாவை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் விஜய் பர்கியாவின் மகன் ஆகாஷ் விஜய் பர்கியா இந்தூர் தொகுதியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான இவர் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மாநகராட்சி அதிகாரி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி கொண்டிருக்கும் போது தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த எம்‌எல்‌ஏ ஆகாஷ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றிய நிலையில், பேட்டால் தாக்கியதாகவும் தகவல்கள் பரவின. அதில் பொது மக்கள் கூட்டத்தின் நடுவே செய்தியாளர்கள் படம் பிடித்து கொண்டிருந்த போது பாஜக எம்‌எல்‌ஏ ஆகாஷ் அதிகாரியை தாக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

 

மேலும், அவருடன் வந்த அவரின் ஆதரவாளர்களும் அதிகாரியை விடாமல் விரட்டி தாக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தன. அதிகாரியை தாக்கிய பாஜக எம்‌எல்‌ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனையடுத்து பாஜக எம்‌எல்‌ஏ ஆகாஷ் பர்கியா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.