அதிமுகவில் அனலை ஏற்படுத்திய திருப்பரங்குன்றம் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

கட்சி கட்டுப்பாட்டுகளை மீறி யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று அதிமுக தலைமை கண்டிப்புடன் கூறிய நிலையில் மதுரையில் சட்ட மன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திடீரென ஒன்றிய செயலாளர்களை அழைத்து ஆலோசனை நடத்தியது பரபரப்பை அதிகரித்துள்ளது. மதுரை திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா அழைப்பின் பேரில் நடந்த ஆலோசனை கூட்டத்தில்  ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் போன்ற ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் பேசிய ராஜன் செல்லப்பா கட்சி கட்டுப்பாடு என்பது நிர்வாகிகளுக்கு மட்டும் அல்லாது அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும் என்றார். தற்போதைய சூழலில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை அவசியம் என்று கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது கருத்துக்கு எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் நடத்தப்பட்ட கூட்டம் உண்மையிலேயே ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டமா அல்லது உட்கட்சி விவகாரம் குறித்து ஆதரவு திரட்டவா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.