அதிமுக கூட்டணி நன்றாக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பளீச் பதில்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் ஸ்ரவன்குமார் ஜடாவத், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் பெரியய்யா உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழ்நாட்டை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தொடர்ந்து சிறப்பாக வழிநடத்தி வருகின்றனர் எனவும், தமிழகத்தில் கடுமையான வறட்சி, மழையின்மை காரணமாக குடிநீர் பிரச்சணை ஏற்பட்டது எனவும்,அனைத்து பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் சீராக இருக்க அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசணை நடத்தப்பட்டது எனவும் அவர் கூறினார்.

 

மேலும்,400 கோடி ரூபாய் குடிநீர் வழங்கல் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும், லாரி மூலம் தண்ணீர் விநியோகம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கோவை மாவட்ட குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பாகவும், நிபா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ஏற்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், முறையாக குடிநீர் வழங்கும் பணிகளை வேகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும்,கோவை,சிங்காநல்லூர், அவிநாசி சாலை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலம் கட்டப்படும் எனவும் அவர் கூறினார். உள்ளாட்சி தேர்தல் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது எனவும், தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் துரிதமாக பணிகளை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, அதிமுக கூட்டணி நன்றாக உள்ளதாகவும், எந்த பிரச்சினையும் இல்லை எனவும் எஸ்.பி.வேலுமணி பதிலளித்தார்.