கோவையில் திடீரென பெய்த மழையில் சாலையில் ஏற்பட்ட கழிவு நீர் அடைப்பை சரி செய்த போக்குவரத்து காவலர்

கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், மழை பெய்ய தொடங்கியது.கோவை ராமநாதபுரம், சித்ரா, ரெயில் நிலையம், அவினாசி சாலை மேம்பாலம், சிங்காநல்லூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

 

இந்நிலையில் கோவை இரயில் நிலையம் பகுதியில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் சாக்கடையுடன் கலந்து அருகில் உள்ள லங்கா கார்னர் பாலத்தின் கீழ் நிறைந்து வழிந்தது.வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில் சாலையில் சாக்கடையில் மழை நீர் செல்ல வழி இல்லாததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில் அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் ஜான் கென்னடி மற்றும் பாண்டி ஆகியோர் இணைந்து உடனடியாக பாலத்தில் இருந்த நீரை அப்புறப்படுத்துவதிலும், அடைந்த நிலையில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய துவங்கினா்.

 

இதனால் வெள்ளம் மெதுவாக வழிந்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.இதனை கண்ட பொதுமக்கள் போக்குவரத்து காவலர்களை பாராட்டி சென்றனர்.