நாசா சர்வதேச நிலா உற்றுநோக்குதல் நிகழ்வில் மாணவ மாணவிகள் திரளாக பார்த்து பரவசம்!

பெங்களூரு, ஆக்டிவிட்டி எஜூகேட்டர் தேசிய கல்வி வள நிறுவனம் மற்றும் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டுவரும் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாசா (USA) சர்வதேச நிலா உற்று நோக்குதல் இரவு நிகழ்வு நேற்றுமுன்தினம் மாலை 7 மணிக்கு பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் ஏ கே சி தியாகராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

பெங்களூரு, ஆக்டிவிட்டி எஜூகேட்டர் தேசிய கல்வி வள நிறுவன இயக்குனர் ஆர்,பாலமோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வான்வெளியில் நிலாவில் நிகழும் அறிய நிகழ்வுகள், நிலவின் மேல்பகுதி மற்றும் அதன் மேல்பகுதியில் காணப்படும் மேடு, பள்ளங்கள் ஆகியவற்றை விளக்கி கூறினார். தொடர்ந்து மாணவர்களுக்கு தொலைநோக்கி செயல்படும் விதம் அதன் பயன்கள் குறித்து விளக்கி கூறினர். பின்னர் மாணவ மாணவிகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 8 இன்ச் தானியங்கியாக செயல்படும் மீத்திறன் பெற்ற தொலைநோக்கி மற்றும் 1000 மடங்கு பெரிதாக காட்டும் பெரிய தொலைநோக்கி ஆகியவற்றை கொண்டு வானில் உள்ள நட்சத்திரம் மற்றும் நிலாவை பார்த்து பரவசம் அடைந்தனர். பின்னர் கையடக்க கேமரா மூலம் வானில் தெரிந்த நட்சத்திர காட்சிகளை அங்கு அமைக்கப்பட்டு இருந்த சிறப்பு திரையில் கண்டனர்.. பின்னர் 10 மடங்கு பெரிதாக காட்டும் தொலைநோக்கி மற்றும் இரவிலும் தெளிவாக தெரியும் பைனாகுலர் ஆகியவற்றின் மூலம் விண்ணில் தெரிந்த காட்சிகளை மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பார்த்தனர். முன்னதாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த மாணவர்களுக்கு கேரியர் கைடன்ஸ் என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது

ஏற்கனவே கொங்கு பள்ளியில் படிக்கும் 55 மாணவர்கள் மற்றும் 45 மாணவிகள் என 100 மாணவர்கள் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாணவர்கள் தங்களின் அறிவியல் திறனை மேம்படுத்தவும், விண்வெளி ஆய்வு தொழில்நுட்பம் குறித்து அறிந்து கொள்ளவும் பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிற்கு கல்விஅறிவியல் சுற்றுலா சென்று வந்தது குறிப்பிடத்தக்கது. விழா முடிவில் பொருளாளர் சந்திரசேகர் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி அறக்கட்டளை நிர்வாகிகள் ஈஸ்வரன், கருப்புசாமி, ஆசிரியர், ஆசிரியைகள் மாணவர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர்.