உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அவதார் ஃபையர் அன்ட் ஆஷ்’ திரைப்படம் குறித்த முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் வரும் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தின் ப்ரீமியர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்ஃபி தியேட்டரில் கடந்த 1-ம் தேதி திரையிடப்பட்டது. இதற்கான விமர்சனம் தற்போது வெளியாகியுள்ளது.
ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் சாம் வொர்திங்டன், ஜோய் சால்டனா, ஸ்டீஃபன் லாங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அவதார்’. இந்தப் படம் கடந்த 2009-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மிக பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் 20 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
இதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘Avatar: The Way of Water’ என்ற பெயரில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படமும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘அவதார்’ சீரிஸின் 3-வது பாகம், ‘Avatar: Fire and Ash’ என்ற பெயரில் வரும் 19-ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறது. மேலும் 2 பாகங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீமியர் திரையிடலுக்கு பின் ஆங்கில செய்தி நிறுவனங்கள் படம் குறித்து விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். பிபிசி வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “அவதார் சீரிஸ்களிலேயே மிகவும் மோசமான மற்றும் நீளமான பாகமாக இந்த பாகம் உருவாகியுள்ளது. 197 நிமிட ஸ்கிரீன் சேவர் கிராஃபிக்ஸ், அபத்தமான வசனங்கள், ஈர்க்காத திரைக்கதை சோர்வளிக்கிறது. அவதாரின் பண்டோரா உலகம் அதன் மதிப்பை இழந்துவிட்டது” என கூறி 1 ஸ்டார் ரேட்டிங்கை கொடுத்துள்ளது.
கார்டியன் பத்திரிகை 2 ஸ்டார் ரேட்டிங்கை கொடுத்துள்ளது. “3 மணி நேர அபத்த சினிமா” என விமர்சிக்கப்பட்டுள்ளது. டெலிகிராஃப் பத்திரிக்கை வெளியிட்டுள்ள விமர்சனத்தில், “மீன் தொட்டிக்குள் பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்ட மினுமினுப்பு காட்சிகளை பார்ப்பது போல இருக்கிறது” என கடுமையாக விமர்சித்துள்ளது.
‘அவதார் 3’ படத்துக்கு பெரும்பாலான செய்தி நிறுவனங்களில் எதிர்மறையான விமர்சனங்களே வெளியாகியுள்ளது. பொதுமக்கள் இந்தப் படத்தை எப்படி வரவேற்பார்கள்? அவர்களின் விமர்சனம் என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.






