பரந்தூர் விமான நிலையத் திட்டம் -1,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தல் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ள சென்னைக்கான இரண்டாவது பசுமைவெளி விமான நிலையமான பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுவரை சுமார் 1,000 ஏக்கர் தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக வருவாய்த் துறையினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

 

 

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் 5,320 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இது காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இரு தாலுகாக்களில் பரந்தூரைச் சுற்றியுள்ள 20 கிராமங்களைச் சார்ந்தது. விமான நிலையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பு ரூ. 29,150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அரசு நிலங்கள் போக, மீதமுள்ள 3,774 ஏக்கர் தனியார் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக நில உரிமையாளர்களுக்கு இதுவரை ரூ. 400 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

 

விமான நிலையத்தின் அடுத்த கட்ட மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், நில எடுப்புப் பணிகளை வருவாய்த் துறை 21 யூனிட்கள் வாயிலாகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் வரை 12 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது 566 ஏக்கர் நிலங்களை வழங்கியிருந்தனர்.

 

அக்டோபர் மாத முடிவில், இதுவரை மொத்தம் 1,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த ஜூலை 9-ஆம் தேதி, பரந்தூர், நெல்வாய், பொடவூர், அக்கமாபுரம், வளத்தூர் ஆகிய ஐந்து கிராமங்களைச் சேர்ந்த 19 பேர் முதன்முதலாகத் தாங்களாக முன்வந்து நிலங்களை ஒப்படைத்தனர்.

 

பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் கிராம மக்கள், தங்கள் குடியிருப்புகள், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைகள் அழிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி தொடர்ச்சியாகப் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

 

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் உட்பட பல அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டங்கள் நடந்தபோதிலும், அதிகாரிகள் திட்டமிட்டபடி பணி தொடரும் என்பதில் உறுதியாக உள்ளனர். நில எடுப்புக்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மற்றொரு தரப்பினர் தங்களது நிலங்களை விமான நிலையத் திட்டத்திற்கென தாங்களாகவே முன்வந்து வழங்கி வருகின்றனர்.

 

தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.