உலக அமைதிக்காக சைக்கிள் பேரணியில் வந்த 31 வீரர்களுக்கு ரோட்டரி சங்கங்கள்  அவிநாசியில் உற்சாக வரவேற்பு

திருப்பூர், ஈரோடு, உடுமலை, கோபி, ஊட்டி ரோட்டரி சங்கங்கள் உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3201 மற்றும் கோவை மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்கள் உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டம் 3203 ஆகியவற்றின் சார்பில் உலக அமைதி, வறுமை ஒழிப்பு, தரமான கல்வி மேம்பாடு, போலியோ ஒழிப்பு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி அமைதி ஜோதியுடன் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி நேற்று காலை 7 மணிக்கு கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கியது.

 

சைக்கிள் பேரணியை ரோட்டரி மாவட்டம் 3203 ஆளுநர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து தொடக்கி வைத்தார். இவரது மனைவி பரிமளா தேவி அமைதி ஜோதியை சைக்கிள் வீரர்களிடம் கொடுத்தார். ரோட்டரி மாவட்டம் 3201 ஆளுநர் ராஜசேகர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். அமைதி ஜோதியுடன் சைக்கிளில் விழிப்புணர்வு பேரணி கோபிசெட்டிபாளையத்தில் தொடங்கி குன்னத்தூர், பெருமாநல்லூர், அவிநாசி வழியாக மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் 83 கிலோ மீட்டர் பயணம் செய்து கோவை சென்றது.

 

இதில் திருப்பூர் மற்றும் கோவை ரைடர்ஸ் கிளப், மற்றும் 27 ரோட்டரி சங்கங்களை சேர்ந்த 31 சைக்கிள் வீரர்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டனர். வழிநெடுக போரில்லா உலக அமைதி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தனர்.

 

இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் பாரதி ரோட்டரி சங்க தலைவர் ராஜலட்சுமி கோவிந்தராஜ், நல்லசிவம், தனசேகர், அனைத்து மகளிர் ரோட்டரி சங்க தலைவர்கள் மற்றும் பல்வேறு ரோட்டரி சங்க தலைவர்கள் கோபிநாத், விஜய் கிருஷ்ணா, கார்த்திகேயன் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்து இருந்தனர்.

 

நிகழ்ச்சியில் 3201 மற்றும் 3203 ஆகிய ரோட்டரி மாவட்டங்களை சேர்ந்த உதவி ரோட்டரி ஆளுநர்கள், மாவட்ட நிர்வாகிகள், தலைவர்கள் மற்றும் பல்வேறு ரோட்டரி சங்க உறுப்பினர்கள் சைக்கிள் பேரணி வந்த அந்தந்த இடங்களில் வரவேற்பு கொடுத்து வீரர்களுக்கு உணவு உள்பட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்தனர்.