புதுச்சேரியில் காரில் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்திய ஒரு பெண் காவலரை தாக்கி விட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் கைது செய்தனர். கடந்த 19ஆம் தேதி தமிழகம் நான்கு முனை சந்திப்பில் அதி வேகமாக வந்த கார் ஒன்று முன் சென்ற வாகனங்களின் மீது இடித்து விட்டு நிற்காமல் சென்றது.
அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல்படை பெண் காவலர் ஜீவிதா காரை மடக்கி பிடித்து காரிலிருந்து அவனை காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். காரை ஓட்டி வந்த அந்த நபர் காவல் நிலையத்தில் நிறுத்தாமல் கடலூர் நோக்கி வேகமாக சென்றதால் பெண் காவலர் காரை நிறுத்துமாறு கூறியபோது அவன் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் லேசான காயமடைந்த பெண் காவலர் ஸ்டியரிங்கை திருப்பி சாலை ஓரத்தில் காரை நிறுத்தச் செய்து கீழே இறங்கிய உடன் அந்த நபர் காரில் தப்பி சென்றதாகவும் சொல்லப்படுகிறது. பெண் காவலர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஷாஜி என்ற அந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.






