கோவை : மருதமலை சட்டக்கல்லூரி அருகே தனியார் கட்டுமான நிறுவன காவலாளி காட்டு யானை தாக்கி பலி.வனத்துறையினர் விசாரணை !!!

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது.இவரது மகன் முகமது நியாஸ் ( வயது 65 ).கோவை மருதமலை சட்டக்கல்லூரி அருகே உள்ள கட்டுமான நிறுவனத்தின் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

 

இந்த நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் டீ சாப்பிடுவதற்காக மருதமலை சென்றுள்ளார்.அப்போது,அப்பகுதியில் மறைந்திருந்த ஆண் காட்டு யானை முகமது நியாஸை பலமாக இடித்து தள்ளியுள்ளது.இதில் சம்பவ இடத்திலேயே முகமது நியாஸ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 

இச்சம்பவம் குறித்து அப்பகுதி பொது மக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வடவள்ளி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் 11 காட்டு யானைகள் யானை மடுவு பகுதியில் முகாமிட்டுள்ளதாகவும்,காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும்,இப்பகுதியில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.