சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி குழந்தைகளுக்கு கொடுக்கும் சத்து உணவில் விஷம் வைத்து விடுவேன் என மிரட்டிய அரசு பள்ளி பெண் சமையலர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பல ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் இளைஞர்கள் சிலர் மது அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து போலீசில் புகார் அளித்து இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மது அருந்துபவன் அங்கு சமையலராக பணியாற்றும் பெண்ணின் மகன் என்ற நிலையில் போலீசார் நடவடிக்கையால் ஊர் மக்கள் மீது அவர்கள் கோபத்தில் இருந்துள்ளனர். ஒன்று சேர்ந்து புகார் கொடுத்த மக்களையும் மிரட்டியுள்ளனர்.
சமையல் செய்யும் பொழுது உங்கள் குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விடுவேன் என மிரட்டினார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாவட்ட சத்துணவு மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.






