பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் அடுத்தடுத்து கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் திருப்புதல் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்திருக்கிறது.
பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உயிரியல், கணிதம், வணிக கணிதம், வினாத்தாள்கள் வெளியானது. இயற்பியல் வினாத்தாளும் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள பள்ளிக்கல்வித்துறை மாணவர்களை தயார் செய்ய திருப்புதல் தேர்வு நடந்தது என்றும் அதன் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பாதுகாப்பான முறையில் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் பெற்றோர் மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வந்தவாசியில் வினாத்தாள் வெளியான நிலையில் பள்ளிகளில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.






