நடிகை மனோரமா மகன் பூபதி மரணம்..!
பிரபல நகைச்சுவை நடிகை ‘ஆச்சி’ மனோரமாவின் ஒரே மகனும், நடிகருமான பூபதி (70), இன்று (23.10.2025) காலை 10.40 மணியளவில் காலமானார் என்ற துயரச் செய்தி திரையுலகினரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலக சாதனை படைத்த மனோரமாவின் தனிப்பட்ட வாழ்க்கைப் போராட்டங்களுக்குப் பிறகு, பூபதியின் மறைவு அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் கலங்க வைத்துள்ளது.
பூபதி சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, நடிகர் சிவாஜி கணேசன் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த வேடங்கள் குறிப்பிடத்தக்கவை. தாயார் மனோரமா நடித்த “நான் பெத்த மகனே” படத்திலும் இவர் நடித்திருந்தார். மறைந்த இயக்குநர் விசுவின் திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகில் அறிமுகமானார்.
பூபதிக்கு மனைவி தனலெட்சுமி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். ராஜராஜன், அபிராமி மற்றும் மீனாட்சி ஆவர். இவர்களைத் துயரில் ஆழ்த்தி பூபதி மறைந்துள்ளார். மறைந்த பூபதியின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக, தி நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 3 மணிக்கு மேல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் நடைபெறும்.
தாயின் புகழின் நிழலில் வாழ்ந்து, திரையுலகிற்குத் தன் பங்களிப்பைச் செலுத்திய பூபதியின் மறைவுக்கு ‘ஆச்சி’ மனோரமாவின் ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். மறைந்த நடிகை மனோரமாவின் மகன் உடலுக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.





