தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவே இன்று (அக்.23) வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து செல்லக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது வடக்கு, வடமேற்கு திசையில் இன்று நகர்ந்து செல்லக்கூடும். மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று முதல் 27-ம் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், நாளை (அக்.24) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டிலும் புதுச்சேரியிலும் 26, 27-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். தொடர்ந்து வரும் நாட்களிலும் தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைக்கான சூழல் நிலவும்.
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாகவும், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 23) பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் விதமாக அடுத்த மாதம் 15 ஆம் தேதியன்று வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இதுவரை 15 அணைகள் மற்றும் 1,522 ஏரிகள் நிரம்பியுள்ளன. அரசுத் துறைகள் வெள்ளம் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.
வட, தென் தமிழக கடலோரப் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், புதுச்சேரி, மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






