தாம்பரம்- செங்கல்பட்டு இடையே ரூ.757 கோடியில் 4-வது ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்..!

சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள் செல்லும் பிரதான பாதையான தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில், நெரிசலைக் குறைக்கும் விதமாக நான்காவது புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

30.02 கி.மீ. தூரமுள்ள இந்த நான்காவது ரயில் பாதை திட்டத்திற்கு ரூ. 757.18 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புதிதாக அமையவுள்ள இந்த வழித்தடத்தில் ரயில்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது இந்த வழித்தடத்தில் தினமும் 60க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 300க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஆனால், இருப்பது மூன்று ரயில் பாதைகள் மட்டுமே. இதனால், இந்த வழித்தடத்தின் பயன்பாடு 87 சதவீதமாக உள்ளது.

 

நான்காவது பாதை அமைக்கப்பட்டால், ரயில்கள் நெரிசல் இன்றி இயங்க உதவுவதுடன், பயணிகளின் பயன்பாடு 136 சதவீதமாக உயரும். இந்தத் திட்டம், செங்கல்பட்டு வரையில் மின்சார ரயில் சேவையை நீட்டிக்கவும், பயணிகளின் நெரிசலைக் குறைக்கவும் உதவும்.

 

தாம்பரம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு இந்தத் திட்டம் வரப்பிரசாதமாக அமையும். மேலும், புதிதாக அமையவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் பரந்தூர் விமான நிலையம் ஆகியவற்றுக்குச் செல்லும் பயணிகளுக்கும் இது பேருதவியாக இருக்கும்.

 

பொத்தேரி பகுதியில் சரக்கு ரயில் போக்குவரத்து கையாளப்படும் என்பதால், இதன் மூலம் ஆண்டுக்கு ரூ. 157 கோடி அளவில் கூடுதல் வருவாய் ஈட்டவும் வாய்ப்புள்ளது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.