உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய், மணி ரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் படங்களை தாண்டி பாலிவுட்டில் இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஜீன்ஸ், ராவணன், பொன்னியின் செல்வன் என தமிழில் அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி வருகிறார். இருப்பினும் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இவர் நடிப்பில் வெளியான விளம்பரங்கள் பல மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது. குறிப்பாக அதில் அமீர் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் நடித்த பெப்சி விளம்பரம் மிகவும் முக்கியமானது.
இந்நிலையில், விளம்பர உலக ஜாம்பவான் பிரஹலாத் கக்கர், இந்த விளம்பரம் குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்த தகவல் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், ” அந்த விளம்பரத்திற்கு ஆட்களைத் தேர்வு செய்ய எங்களுக்கு மூன்று மாதங்கள் ஆனது. கதைக்கு பொருத்தமானவர்கள் தேவைப்பட்டனர். ஐஸ்வர்யா அப்போது பிரபலமாக இல்லை.
நான்கு வினாடிகள் மட்டுமே திரையில் தோன்றுவதால் மக்கள் மனதில் இடம் பெரும் ஒருவர் தேவைப்பட்டார். விளம்பரம் வெளியான மறுநாள் காலை எனக்கு 5,000 தொலைபேசி அழைப்புகள் வந்தன. யார் அந்த சஞ்சு? (விளம்பரத்தில் ஐஸ்வர்யாவின் கதாபாத்திரத்தின் பெயர்) அவர் எங்கிருந்து வருகிறார்? என்று கேட்டார்கள்” என தெரிவித்துள்ளார்.






