கைவைத்தியம் எனக்கூறி பச்சிளம் குழந்தைக்கு பாதரசம் அளித்த அபாயம்!
நாகை மாவட்டத்தில் பிறந்து ஒரு வாரத்திற்குள் பச்சிளம் குழந்தைக்கு பாதரசத்தை கொடுத்து கை வைத்தியம் பார்த்தது அரங்கேறியுள்ளது. சரவணன் என்பவரது மனைவி சுமித்திராவிற்கு கடந்த 16 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையின் வயிறு வீங்கியது போல இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவர்கள் ஒரு வாரம் சிகிச்சை அளித்தனர். அப்போது குழந்தை கருப்பு நிறத்தில் வாந்தி எடுத்ததோடு உடல்நிலை மிகவும் மோசமானது. இது குறித்து குழந்தையின் குடும்பத்தாரிடமும் மருத்துவர்கள் கேட்டபோது, நாட்டு மருத்துவ முறைப்படி பாதரசத்தை வெற்றிலை சாற்றில் கலந்து கொடுப்பதாக கூறினர்.
பின்னர் கூடுதல் கவனம் அளித்து சிகிச்சையளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கடந்த இரண்டு நாட்களாக குழந்தை தீவிர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தை தற்போது அபாய கட்டத்தை தாண்டி இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.





