தமிழகம், புதுவையில் நாளை தொடங்குகிறது பிளஸ் டூ பொதுத்தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. சுமார் எட்டரை லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்க உள்ளது.
இதில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 7,276 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 16 ஆயிரத்து 359 மாணவர்கள், 19,166 தனித்தேர்வர்கள் என மொத்தமாக 8 லட்சத்து 35 ஆயிரத்து 525 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு அறைகளில் மாணவர்களை கண்காணிக்க 42,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர்.
முறைகேடுகளை தடுக்க நான்காயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 24ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு நடைபெற இருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





