புகைப்படங்களை வைத்துக் கொண்டு காதலியை மிரட்டிய பேஸ்புக் காதலன்..!
முகநூலில் பழகிய பெண் காதலை மறுத்து விட்ட ஆத்திரத்தில் இளம்பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போட்டு பணம் கேட்டு மிரட்டிய சென்னையை சேர்ந்த இளைஞர் மதுரையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த கண்ணன் முகநூலில் மதுரையை சேர்ந்த இளம் பெண்ணுடன் அறிமுகமாகி காதலித்துள்ளார். அடிக்கடி மதுரைக்கு சென்று இளம் பெண்ணை சந்தித்து பல இடங்களுக்கு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் காதலை முறித்துக்கொண்டு விலகியுள்ளார்.
இளம் பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்ததை அறிந்த கண்ணன் இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை போலியாக உருவாக்கி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நபருக்கு வாட்ஸப்பில் அவற்றை அனுப்பியுள்ளார்.
இதனால் திருமணம் நின்று போயுள்ளது. பின்னர் இது குறித்து அறிந்த இளம் பெண்ணின் தந்தை அவரிடம் முறையிட்டுள்ளார். அப்போது ஐந்து லட்சம் ரூபாய் தருமாறு மிரட்டியதால் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் இரண்டு மணி நேரத்தில் கைது செய்துள்ளனர்.






