ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், சிந்து நதி பகிர்வு ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, வாக எல்லை மூடல் என மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
பாகிஸ்தானும் இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க தடை, சிம்லா ஒப்பந்தம் ரத்து என அறிவித்துள்ளது.இந்நிலையில் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், நிதின் கட்காரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பிரதான கட்சிகளான காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.இந்தக் கூட்டம் வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளோம். அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும், எதிர்க்கட்சி தனது முழு ஆதரவையும் தரும்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று நாங்கள் கூறினோம். பிரதமர் மோடி எடுக்கும் முடிவே இறுதியானது என்பதால், இதுபோன்ற ஒரு முக்கியமான கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்வது மிகவும் முக்கியம். மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தபோதிலும் பாதுகாப்பு குறைபாடு எப்படி நடந்தது? பயங்கரவாத தாக்குதலுக்கு அரசாங்கம் உடனடியாக பதிலளிக்கவில்லை.
நாட்டின் நலனுக்காக அரசாங்கத்தின் முடிவை நாங்கள் ஆதரிப்போம். இந்த சம்பவத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அதேசமயம், நாடு ஒன்றுபட்டுள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார்.திமுகவின் துணை பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திருச்சி சிவா, “பஹல்காமில் நடந்ததை நாங்கள் கண்டிக்கிறோம், இதுபோன்ற செயல்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டில் நடக்கக்கூடாது.
எனவே நாம் வெறும் வார்த்தைகளில் வெளிப்படுத்துவதோடும், அவற்றைக் கண்டிப்பதோடும் நின்றுவிடக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருக்க சில நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் எடுக்கும் உறுதியான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை திமுக ஆதரிக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருபவர்களைப் பார்த்து நலம் விசாரிக்க நாளை (25ஆம் தேதி) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காஷ்மீர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.