பெங்களூருவில், பேருந்திற்காக காத்திருந்த தமிழ்நாட்டை சேர்ந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி அளவில், தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான பெண் பெங்களூருவில் உள்ள கே.ஆர். மார்க்கெட் அருகே பேருந்திற்காக காத்து கொண்டிருந்தார்.
அப்போது, அங்கிருந்த 2 பேரிடம் ஏலஹன்கா செல்வதற்கான பேருந்து எங்கே வரும் என அப்பெண் விசாரித்துள்ளார். பெண்ணிற்கு உதவுவதை போன்று நடித்த 2 பேரும், பேருந்து நிற்கும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, மார்க்கெட்டிற்கு பின்புறம் உள்ள குடோன் சாலைக்கு அழைத்து சென்றனர்.
யாரும் இல்லாத அந்த இடத்தில், அப்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 பேரும், அவரிடம் இருந்த செல்போன், நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக, பெங்களூரு மத்திய மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், மார்க்கெட்டில் பணியாற்றும் கணேஷ் மற்றும் ஷரவன் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
‘இந்த சம்பவத்தை பா.ஜ., அரசியலாக்க விரும்புகிறது. பா.ஜ., ஆட்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கவில்லையா?’ என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, ‘அனைத்தையும் அரசியலாக்கி நியாயப்படுத்த பார்க்கும் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என கர்நாடகா பதில் அளித்துள்ளது.
பேருந்திற்காக காத்திருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார்.