இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழப்பும் 27 ஆகியுள்ளது. தமிழகத்தில் ஈரோட்டில் மட்டும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியான நிலையில் எண்ணிக்கையும் 50 ஆகியுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை பலி எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் 7 லட்சத்தை எட்டியுள்ளது. இதில் இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரிட்டன், ஈரான் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும், நோய் தொற்று பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கையும் விறுவிறுவென உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 170 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1024 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் இன்று 27 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்திலும் நேற்று மேலும் பேருக்கு கொரோனா பாதிப்பு 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே ஈரோட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளானவருக்கு சிகிச்சை அளித்த இளம் பெண் மருத்துவர், அவருடைய 10 மாத குழந்தை, மருத்துவரின் தாய் மற்றும் வீட்டு வேலை செய்யும் பெண் என ஒரே குடும்பத்தில் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் இதுவரை 43,538 பேர் தனிமைப்படுத்தப் Uட்டு உள்ளதாகவும், கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி பொது மக்களில் பலர் தங்களது இரு சக்கர வாகனங்களிலும்,நான்கு சக்கர வாகனங்களிலும் அத்துமீறி சாலையில் வலம் வருகின்றனர்.
இந்த நிலையில் 144 தடை உத்தரவினை மீறியதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது,அவர் மேற்கு மண்டலத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக 3370 வழக்கு பதிவு செய்யப்பட்டு 3950 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும்,1968 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,கோவை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 536 வழக்கு பதிவு செய்யப்பட்டு 645 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 269 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா தகவல் தெரிவித்துள்ளார்.