ஊரக உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் ,வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதற்கும், வாக்காளர்கள் முழு சுதந்திரத்துடன் தங்களது வாக்கினை செலுத்துவதற்கும் அனைத்து அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு பக்கத்தில் அமைக்கப்படும் முகாம்களுக்கு அருகே தேவையில்லாமல் கூடுதலை தவிர்க்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குபதிவு நாளில் தமது சொந்த உபயோகத்திற்காக ஒரே ஒரு வாகனத்தை மட்டும் அவர் போட்டியிடும் பதவிக்கு தொடர்புடைய பகுதியில் பயன்படுத்திக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
வேட்பாளர் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் வாகனத்தை வாக்குபதிவு நாளில் வேறு எந்த நபரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும், மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்களிப்பதை தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.