பாலிவுட் நடிகை வாணி கபூர் அணிந்திருந்த மேலாடை சர்ச்சைக்கு வித்திட்ட நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹிந்தி சினிமாவில் படு கவர்ச்சியாக நடிக்கும் நடிகைகளில் ஒருவர்தான் வாணி கபூர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு பாலிவுட் திரை உலகில் காலடி எடுத்து வைத்த வாணி கபூர், ஆஹா கல்யாணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அண்மையில் கிருத்திக் ரோஷன் உடன் இணைந்து நடித்த திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தந்தது.
31 வயதான நடிகை வாணி கபூர் சமூகவலைதளங்களில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிடுவதுடன் தனது கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களையும் கவர்ந்து வருகிறார். அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் அணிந்திருந்த மேலாடையில் ஹேராம் என்ற பெயர் அச்சிடப்பட்டிருந்தது தான் வந்த சர்ச்சைக்கு காரணம். இதனை கண்டு கொதித்தெழுந்த ஹிந்து மதத்தினர் வாணி கபூரை தாக்கி இணைய பக்கங்களின் கடுமையாக விமர்சித்தனர். ஹிந்து மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாக கூறி அவர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் பாலிவுட் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து அந்த பதிவை வாணிகபூர் நீக்கியுள்ளார். இதுதொடர்பாக வாணி கபூருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு பாலிவுட் நடிகை ஊர்மிளா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு பாலிவுட் நடிகை சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.