நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ என்ற திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
24 ஏஎம் நிறுவனத்தின் பங்குதாரரான ராஜா, பிரபு, ஜெயதேவி ஆகிய மூவரும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு நிறுவனத்திடம் 10 கோடி ரூபாய் கடனாக பெற்றதாக தெரிகிறது. ஆண்டுக்கு 24 விழுக்காடு வட்டியோடு 10 மாதங்களில் கடனை திருப்பி செலுத்துவதாக அந்நிறுவனம் கூறிய நிலையில் இதுவரை பணத்தை திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது .
இந்நிலையில் 24 ஏஎம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் ஹீரோ படத்தை கேஜிஆர் என்ற ஃபிலிம் நிறுவனத்தின் மூலமாக அடுத்த மாதம் 20ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஒப்பந்தப்படி கடன் தொகை 10 கோடி ரூபாயை 24 விழுக்காடு வட்டியோடு திருப்பி வழங்க உத்தரவிடவும் ஹீரோ படத்தை வெளியிட தடை விதிக்கவும் கோரி சென்னை உயர் நீதிமன்ற நடுவர் மன்றத்தில் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹீரோ படத்தை வேறு தலைப்பிலோ, வேறு நிறுவனங்களின் பெயரிலோ வெளியிட இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.