திருச்சி கொள்ளிடம் ஆற்றின் அருகே பேசிக்கொண்டு இருந்த காதல் ஜோடியை மிரட்டிய இளைஞர்கள் சிலர் காதலனை தாக்கி ஆற்றில் தூக்கி எறிந்தனர். காதலி கொடுத்த தகவலின்பேரில் தீயணைப்புத்துறையினர் ஆற்றில் வீசப்பட்ட காதலனை தேடி வருகின்றனர்.
துரையூர் பகுதியைச் சேர்ந்த ஜீவித் என்ற இளைஞர் திருச்சியில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் உரையூர் பகுதியிலுள்ள கலை அறிவியல் கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தின் கீழ் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மது அருந்திகொண்டு சில இளைஞர்கள் ஜீவித்தையும் அவரது காதலியையும் மிரட்டியுள்ளனர்.
ஒருகட்டத்தில் ஜீவித்தை தாக்கத் தொடங்கிய அந்த போதை இளைஞர்கள் ஜீவித்தின் காதலியிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளனர். இதையடுத்து ஜீவித் அவரது காதலியை அங்கிருந்து தப்பியோடும் படி கூறியுள்ளார். ஜீவித்தை கடுமையாக தாக்கிய அந்த இளைஞர்கள் அவரை கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசி உள்ளனர். நிகழ் விடத்தில் இருந்து தப்பி ஓடிய ஜீவித்தின் காதலி கொள்ளிடம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
அவர் அளித்த தகவலின் பேரில் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள தேவி மங்கலத்தை சேர்ந்த கலையரசன், மணக்காடு பகுதியை சேர்ந்த கோகுல் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட இளைஞர் ஜீவித்தை தீயணைப்புத்துறையினர் படகுகள் மூலம் தேடி வருகின்றனர்.