தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் 4 கோடி ரூபாய்க்கும் மேல் வர்த்தகம் நடந்துள்ளது.
எட்டையபுரத்தில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை மிகவும் புகழ்பெற்றதாகும். தூத்துக்குடி மட்டுமின்றி நெல்லை,மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் என தென் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் ஏராளமானோர் ஆடுகளை வாங்க வருவது வழக்கம். கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, கழுகுமலை ஆகிய பகுதிகளில் ஆடு வளர்க்கும் விவசாயிகள் விற்பனைக்காக இந்த சந்தைக்கு கொண்டு வருவர். மாடுகளை அவர்கள் வாங்கிச் செல்வர்.
புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள் என்பதால் கடந்த மாதம் சந்தையில் விறுவிறுப்பு குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது ஐப்பசி மாதம் பிறந்து விட்டதாலும், அடுத்த வாரம் தீபாவளி என்பதாலும், நேற்று சந்தை களைகட்டியது. ஆடு வளர்ப்போரும், வியாபாரிகளும் அதிகாலையிலேயே அதிகளவில் திரண்டனர். நேற்று ஒரு நாள் மட்டும் 4 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்